வடக்கில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்: வவுனியாவில் சிக்கிய இருவர்

வடக்கில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்: வவுனியாவில் சிக்கிய இருவர்

வடக்கில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையில் ஈடுபட்ட குழுவினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(13.12.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது. அதுபோல வடக்கிலும் அவ்வாறான குழு ஒன்று செயற்பட்டு வந்துள்ளது.

அந்தகுழுவால், வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்தி விட்டு, அந்த முச்சக்கர வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் இன்று(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த முச்சக்கர வண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு விற்பனை செய்திருந்தை தெரிய வந்ததையடுத்து, குறித்த முச்சககர வண்டி மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை என்பனவும் தெரியவந்துள்ளது.

வடக்கில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்: வவுனியாவில் சிக்கிய இருவர் | Jewel Robbery Gang Arrested In Vavuniya

இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் கைதான இரு நபர்களிடம் இருந்தும் முச்சக்கர வண்டி மற்றும் 4 அரைப் பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன், கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.