தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பாடுகளை முன்னெடுப்போர் எவராயினும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஜாலிய சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது,  தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை  இன்று மாலை ஆறு மணி முதல் மேற்கொள்ள  தீர்மானித்துள்ளோம்.

இவ்விடயம் தொடர்பாக உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

மேலும் தேர்தல் கடமையின்போது பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள், பொறுப்புகள், கட்டுப்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்களை பின்பற்றுமாறும் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தி இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.