இளைஞர் மற்றும் யுவதிகளது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணி கையளிப்பு

இளைஞர் மற்றும் யுவதிகளது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணி கையளிப்பு

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளது  எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 35 ஏக்கர் காணிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கையளிக்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும், தலைவருமான திஸார ஜெயசிங்கவினால் இன்று (திங்கட்கிழமை) உத்தியோக பூர்வமாக  இந்த காணிகள் கையளிக்கப்பட்டன.

திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில் 1984 ஆம் ஆண்டு இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சொந்தமான காணிகள், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமாக்கப்பட்டு,  ஆதரவற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அதனை திருகோணமலை மாவட்டத்திலுள்ள  இளைஞர்களது எதிர்கால நடவடிக்கைகளுக்காக இளைஞர் விவசாயம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்காக 35 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டதாகவும் திஸார ஜெயசிங்க தெரிவித்தார்.

இக்காணியினூடாக  சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவதுடன் சர்வதேச இளைஞர் அபிவிருத்தி வலயம் ஒன்றினை உருவாக்க உள்ளதாகவும் இதனூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தூர நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய மாற்றத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திஸார ஜெயசிங்க மற்றும் அவரின் பிரத்தியேக செயலாளர் பசிது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிசிர குமார மற்றும் வடக்கு மாகாண பணிப்பாளர் சந்திரபால, நிர்வாகத்துறை பணிப்பாளர் சமல் மனுல, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.