இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை (Trincomalee) மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 28ஆம் திகதிஅதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

இத் தொகுதி வடக்கு - வடமேற்குத் திசையில் மெதுவாக நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து இன்று சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Heavy Rain With Thunder Weather In Tamil

மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம்தொடர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Heavy Rain With Thunder Weather In Tamil

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.