முதியோர் கொடுப்பனவில் மோசடி ; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்

முதியோர் கொடுப்பனவில் மோசடி ; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்

புத்தளம் - ஆனமடுவ பிரதேச செயகத்தில் முதியோர் கொடுப்பனவு விநியோகத்தில இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அங்கு கடமையாற்றிய பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கணக்காய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவரின் சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதியோர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதியோர் கொடுப்பனவில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் நிதி முகாமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கொடுப்பனவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் உட்பட பல கிராம உத்தியோகத்தர்கள் இதுதொடர்பில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முதியோர் கொடுப்பனவில் மோசடி ; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம் | Fraud Old Age Allowance Five Officers Suspended

இந்த நிதி மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக, புத்தளம் மாவட்ட செயலாளருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் முறைப்பாடுகள் கிடைத்ததோடு, இதுதொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினரிடம் மாவட்ட செயலாளர் ஒப்படைத்துள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான கணக்காய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட கணக்காய்வு பிரிவு அதிகாரிகள், ஆனமடுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் களப் பணிகளை மேற்கொண்டு, அங்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு, மாவட்ட செயலாளரிடம் முழுமையான அறிக்கையை வழங்கியிருந்தனர்.

அந்த அறிக்கையினை கவனத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர் இது தொடர்பான அறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இந்த நிதி மோசடிகள் தொடர்பான மேலதிக சட்டநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் ஐவரையும் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்ய புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.