சீனி வரி குறைப்பு விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

சீனி வரி குறைப்பு விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த உத்தரவானது அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி வழக்கை அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Hantunnethi) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த மனு இன்று (12) எஸ். துரைராஜா (S.Durairaja), குமுதுனி விக்ரமசிங்க (Kumutuni Wickramasinghe) மற்றும் ஜனக் டி சில்வா (Janak de Silva) ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் இன்று முதல் எட்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்தோடு, இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட பிரதிவாதிகள் பட்டியலை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அதன்பின் மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.