பேருந்தில் நேருக்குநேர் மோதிய வான் : 10 பேர் காயம்
கினிகத்தேனை - தியகல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வான் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தின் போது பேருந்தில் பயணித்த 8 பேரும் வானில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மழை பெய்து வருவதால் அவ்வழியாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.