திருமண நிகழ்வில் மோதல்; சமரசம் செய்ய சென்றவருக்கு நேர்ந்த கதி!
திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவத்தகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாவத்தகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (30) இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்புவதற்காகத் தயாராக இருந்த போது, நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் ஹோட்டல் வளாகத்திற்கு முன்பாக மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் இந்த மோதலை சமரசம் செய்வதற்காகச் சென்றுள்ள நிலையில் அங்கிருந்தவர்கள் இவரைப் பலமாகத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை, பின்னவலை பிரதேசத்தைச் சேர்ந்த 24, 27 மற்றும் 29 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.