இலங்கை - இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதில் மாற்றம்

இலங்கை - இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதில் மாற்றம்

இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த சேவை ஆரம்பிக்கும் நாள் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி முதல் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் என இந்த்சிறி (Indsri) படகுசேவை தனியார் நிறுவனத்தின் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

அந்த அறிவிப்பில், சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும்  தாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட பயணிகள் கப்பல் சேவையினை 13/05/2024 முதல் 16/05/2024 இயக்கமுடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவையினை எதிர்வரும் 17/05/2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர், 13/05/2024 முதல் 16/05/2024 பதிவு செய்த பயணிகளை 17/05/2024 இயங்கும் சேவைக்கு மாற்றியுள்ளோம்.

பதிவு செய்த பயணிகள் 17/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்கலாம் அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு, செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.