தற்போது இடம்பெற்று வருகிற பேச்சுவார்த்தை

தற்போது இடம்பெற்று வருகிற பேச்சுவார்த்தை

எதிர்வரும் பொதுத்தேர்தல் தினத்தை தீர்மானிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை இன்று முற்பகல் 11.10 அளவில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பிர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஏ.ஜீ. ஹேரத் மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் கடந்த 2 ஆம் திகதி; உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, பொதுத் தேர்தலை எந்த தினத்தில் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பானது கடந்த 3 ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், அந்த அறிவிப்பானது அன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில்,  பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியினை இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாளை மறுதினம் சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார.

இதன்போது எவ்வாறு தேர்தல் நடத்துவது என்பது  குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியினை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாளைய தினத்திற்குள் இரண்டு மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது 7 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குசீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.