மீண்டுமொரு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள அரச தொழிற்சங்கங்கள்!
இலங்கையில், அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளைய தினம் (27-11-2023) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என அதன் அழைப்பாளர் சந்தன சூரியராச்சி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை ஜனவரி முதல் சம்பளம் வழங்குதல், 20,000 சம்பள அதிகரிப்பு, 2016 ஆம் ஆண்டு முதல் இழந்த முழு ஓய்வூதிய உரிமையை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சிறந்த பதில் வழங்காவிடின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சந்தன சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.