மாணவர்களுக்கு பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபர்! விசாரணைகள் தீவிரம்.
நாவலபிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலரை பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொள்ளுமாறு அதிபர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
33 மாணவர்களை கொண்ட வகுப்பறை ஒன்றில் 7 மாணவர்கள் மாத்திரம் தமது மதிய போசன உணவை பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களில் சுற்றி கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு உணவை கொண்டு வந்த மாணவர்கள் உணவை உட்கொண்டதை அடுத்து, பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை தமது புத்தக பைகளில் வைத்துள்ளனர்.
இதை அவதானித்த பாடசாலை அதிபர், புத்தக பைகளில் வைக்கப்பட்ட பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொள்ளுமாறு மாணவர்களை காட்டாயப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், குறித்த மாணவர்கள் அதிபரின் கட்டாயத்தை அடுத்து, தமது பைகளில் வைக்கப்பட்ட பொலித்தீன்கள் மற்றும் செய்தித்தாள்களை உட்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, பொலித்தீன்கள் மற்றும் செய்தித்தாள்களை உட்கொண்டதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் திடீர் சுகயீனமுற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக தெரியவருகிறது.
இதையடுத்து, குறித்த இரண்டு மாணவர்களும் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவரின் தந்தை நாவலபிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாவலபிட்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.