
அஸ்வெசும 2ஆம் கட்டம் குறித்து வெளியான அறிவிப்பு..!
அஸ்வெசும வேலைத்திட்டத்தின் இரண்டாம்கட்டம் ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு வறுமை ஒரே அளவுகோலாக இருக்கவேண்டும் என எனவும் நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன் வறுமையைக் கணிப்பிடுவதற்கு குறைந்த அளவுகோல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அஸ்வெசும முதல்கட்டம் தோல்வியடைவதற்கு எடுத்துக்கொள்ளப்பட அளவுருக்கள் அதிகமானதாக இருந்தமை மற்றும் அந்த அளவுருக்களுக்கு வழங்கப்பட்ட எடை காரணமாக இருந்ததாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அஸ்வெசும சமூக நலன்புரி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கூடிய போதே குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், வறுமையை அளவிடுவதற்கு மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பாட்டலி சம்பிக்க ரணவக்க, மின்சார அலகுகள் 30இற்கு குறைவான மின்சாரப்பாவனை எனும் அளவுருவை இதற்குப் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து அந்த அளவுருவைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
நலன்புரி நன்மைகளை மூன்று மடங்கு அதிகரித்தாலும், அரசாங்கத்துக்கோ நலன்புரி நன்மைகள் சபைக்கோ மக்களின் வரவேற்பு இல்லாமைக்குக் காரணம் பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இடம்பெற்ற பலவீனங்களே எனச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்குப் பொருத்தமான அளவுருக்கள், 20% வீதத்துக்கும் அதிகமான கல்வி கற்று வேலையில்லாமல் இருப்பவர்கள் உள்ள இலங்கைக்குப் பொருத்தமற்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.