மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு.
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய, உள்ளடக்கிய, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வில் ஜெனிவாவிலுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெல்லி பில்லிங்ஸ்லி உரையாற்றுகையில், மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தொடர்ச்சியான கவனத்தை அமெரிக்கா பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சியை வழிநடத்தும் போது, ஊழலுக்கு எதிரான சட்டம் உட்பட இலங்கையின் பலப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை அமெரிக்கா அங்கீகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் விடுவித்ததையும் அமெரிக்கா வரவேற்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், காணி மீளப் பெறுவதில் ஆரம்ப முன்னேற்றம் பாராட்டத்தக்கது என்ற போதும் சிறுபான்மை சமூகங்களின் மதத் தளங்களில் ஏற்படும் பதற்றங்கள், சிவில் சமூகத்தின் மீதான அரசாங்க அழுத்தம் மற்றும் 2018 முதல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமை குறித்து அமெரிக்கா தமது அதிருப்தியை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிலைமாறுகால நீதி நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் இயங்குவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையை பில்லிங்ஸ்லி வலியுறுத்தியுள்ளார்.