அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 50 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டான் (23-7-2013)
அரியானாவில் 50 அடி ஆழமுள்ள குழிக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன், 3 நாள் மரண போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். அரியானா மாநிலம், சகாதாபாத் மாவட்டத்தில் உள்ளது ஹால்தேரி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்சந்தர். விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி கரம்ஜீத். இவர்கள் மகன் பிரின்ஸ் (வயது 6). சிறுவன் பிரின்ஸ் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே விளையாடிக் அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 50 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டான் (23-7-2013) அரியானாவில் 50 அடி ஆழமுள்ள குழிக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன், 3 நாள் மரண போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். அரியானா மாநிலம், சகாதாபாத் மாவட்டத்தில் உள்ளது ஹால்தேரி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்சந்தர். விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி கரம்ஜீத். இவர்கள் மகன் பிரின்ஸ் (வயது 6). சிறுவன் பிரின்ஸ் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்புதான் 50 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு ஒன்று போட்டிருந்தனர். ஆனால் கிணற்றை தோண்டியவர்கள் அதை மூடாமல் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிய சிறுவன் பிரின்ஸ், திறந்திருந்த குழிக்குள் தவறி விழுந்து விட்டான். இதுபற்றி அறிந்ததும் அவனது பெற்றோரும், கிராம மக்களும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்க முதலில் ஒரு கயிறு ஒன்றை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டனர். ஆனால் சிறுவன் அக்கயிற்றை பிடிக்க முயன்றபோது, அது நழுவிவிட்டது. இதில் அவன் மேலும் அதிக ஆழத்தில் விழுந்தான். இதனால் கிராம மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்நிலையில் சிறுவன் பிரின்ஸ் குழிக்குள் விழுந்த தகவல் அரியானா முதல்வருக்கு தெரியவந்தது. உடனே சிறுவனை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த அரியானா மாநில அரசும் சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் முழு மூச்சுடன் இறங்கியது. குருசேத்திரம் உதவி கமிஷனர் டி.கே.சர்மா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஹால்தேரி கிராமத்துக்கு விரைந்து வந்தனர். சிறுவன் விழுந்த குழியின் அகலம் வெறும் 16 அங்குலம் ஆகும். இதனால் அதே குழியின் வழியாக சிறுவனை வெளியில் எடுப்பது நடக்காத காரியமாக இருந்தது. இதைத் தொடர்ந்து அம்பாலாவில் உள்ள ராணுவ என்ஜினீயர்களுக்கு தகவல் தரப்பட்டது. உடனே அங்கிருந்து கலோனல் எஸ்.கே.விதார்த்தி தலைமையில் என்ஜினீயர்கள் விரைந்து வந்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் பிரவீன் கார்க் தலைமையில் ஒரு மருத்துவக் குழுவினரும் தேவையான கருவிகளுடன் அங்கு வந்து முகாமிட்டனர். ஆம்புலன்சு வாகனம் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க முதலில் குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுவனை உயிருடன் மீட்க என்ஜினீயர்கள் வியூகம் வகுத்தனர். அதிர்ஷ்டவசமாக சிறுவன் குழிக்குள் விழுந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் ஒரு கிணறு பயன்படுத்தாமல் கிடந்தது. இதையடுத்து அந்தக் கிணற்றில் குழி தோண்டி, அதன்வழியாக சிறுவன் சிக்கி இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு சுரங்கம் அமைத்து, அதன் வழியாக சிறுவனை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கிணற்றில் குழி தோண்டும் பணி உடனடியாக தொடங்கியது. வெட்டி போட்ட மண் மற்றும் சகதி கிரேன் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் குழிக்குள் உள்ள சிறுவனின் நிலையை அறிய ஒரு சிறிய காமிராவை உள்ளே அனுப்பினர். அதில் சிறுவன் குழிக்குள் உட்கார்ந்த நிலையில் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவனுக்கு பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் மற்றும் குளுக்கோஸ், டீ மற்றும் உணவு ஆகியவை அவ்வப்போது அனுப்பப்பட்டன. அவற்றை சிறுவன் வாங்கிச் சாப்பிட்டான். இக்காட்சி காமிராவில் தெரிந்தது. பின்னர் சீரான இடைவெளியில் ஆக்சிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. எனினும் இரவில் சிறுவனிடம் எந்த அசைவும் இல்லாததால் மீட்பு குழு கவலை அடைந்தது. உடனே சிறுவனின் பெற்றோரும், நெருங்கிய உறவினர்களும் குழி வழியாக சிறுவனுக்கு தைரியம் ஊட்டினர். இதையடுத்து சிறுவன் பதட்டம் அடையாமல் பதில் அளிக்கத் தொடங்கினான். இதனால் நிம்மதி அடைந்த ராணுவத்தினர் மீட்புப் பணியை முடுக்கி விட்டனர். ஆனால் மேலும் ஒரு சோதனையாக இரவு நேரத்தில் அங்கு மழை பெய்தது. இதனால் குழிதோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் பணிகள் மீண்டும் தொடங்கின. குழிக்குள் இருக்கும் சிறுவன் பயப்படாமல் இருப்பதற்காக காமிராவில் ஒரு சிறிய மின்விளக்கையும் இணைத்து உள்ளே அனுப்பப்பட்டது. பெற்றோரும், உறவினர்களும் அவ்வப்போது சிறுவனுடன் பேசி தைரியப்படுத்தினர். அரியானா மாநில முதல்-மந்திரி ஹூடா சம்பவ இடத்திற்கு நேராக வந்தார். சிறுவன் விழுந்த குழியை பார்வையிட்ட அவர், மீட்புப் பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் சிறுவன் பிரின்சை உயிருடன் மீட்க மும்பை தீயணைப்பு படையினரின் உதவியை அரியானா அரசு கோரியது. இதைத் தொடர்ந்து மண்டல துணை தீயணைப்பு அதிகாரி பிரபாத் ரகன்தாலே என்பவர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் ஹரியானாவுக்கு விமானம் மூலம் விரைந்தனர். இவர்கள் சிறுவனை மீட்க நாலரை டன் எடையுள்ள துளையிடும் கருவிகள், மண்ணை வெட்டும் உபகரணங்கள், கயிறு உள்ளிட்ட அனைத்தையும் விமானத்திலேயே கொண்டு வந்தனர். இரண்டரை மணி நேர பயணத்துக்கு இக்குழுவினர் ஹால்தேரிக்கு வந்து சேர்ந்தனர். உடனே அவர்களின் துணையுடன் ராணுவ என்ஜினீயர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். பிரிகேடியர் ஜே.மான் என்பவர் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். இதனால் மீட்புப் பணி வேகம் பிடித்தது. முதலில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் இருந்த ஆழம் வரை, கிணற்றில் குழி தோண்டப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிறுவன் சிக்கிய ஆழ்துளை கிணற்றுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது. முதல்- மந்திரி ஹூடா மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டார். கவர்னர் கித்வாயும் அங்கு வந்தார். குழிக்குள் சிறுவன் இருந்த இடத்துக்கு கீழே உள்ள மண் பகுதி மிகவும் மென்மையாக இருந்ததால், சுரங்கம் தோண்டும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் வாய்ப்பு இருப்பதை நிபுணர்கள் அறிந்தனர். இதனால் சுரங்கம் அமைக்கும் பணி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்தது. இதைத் தொடர்ந்து மீட்புக் குழுவைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரங்கம் மூலம் சிறுவன் இருக்கும் இடத்தை அடைந்தார். உடனே அவரது உதவியுடன் சிறுவன் சுரங்கம் வழியாக மெதுவாக தவழ்ந்தபடி வெளியே வந்தான். இதையடுத்து மருத்துவர்கள் குழு உள்ளே இறங்கி சிறுவனின் உடல்நிலையை சோதித்தது. பின்னர் அவனுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் அவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். இதைத் தொடர்ந்துராணுவ வீரர் ஒருவர், சிறுவனை வெள்ளை நிறத் துணியால் சுற்றி நெஞ்சோடு அணைத்தபடி வெளியே கொண்டு வந்தார். 50 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த சிறுவன் பிரின்ஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தான். சிறுவனை உயிருடன் பார்த்ததும், அங்கு கூடியிருந்த ராணுவத்தினர், அதிகாரிகள், பொதுமக்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள் * 1914- ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆஸ்திரியா- ஹங்கேரி செர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து ஜுலை 28, 1914-ல் முதலாம் உலகப்போர் ஆரம்பமானது. * 1929- இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது. * 1942- நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது. * 1952- எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் ஆரம்பித்தார். * 1961- நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது. * 1962- லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது. * 1967- அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் அதிகம் வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன. * 1983 விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். * 1983- இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது. * 1988- பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962-ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெவின் பதவியைத் துறந்தார். * 1992- ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது. * 1995 - ஹேல்- பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது. * 1999 - சந்திரா எக்ஸ்- கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது. * 2005 - எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.