மட்டக்களப்பில் பண மோசடியில் ஈடுபட்ட போலி வெளிநாட்டு முகவர் கைது..!
சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி இருவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட போலி வெளிநாட்டு முகவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (18.08.2023) இடம்பெற்றுள்ளது.
இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கடந்த வருடம் நவம்பர் மாதம் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாவும், இன்னொருவரிடம் 60 ஆயிரம் ரூபாவும் வாங்கிகொண்டு கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்ததையடுத்து விசாரணையின் பின்னர் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை இன்று (19.08.2023) மட்டு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.