பண மோசடி சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ..!
வணக்கத்திற்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் அவரது பிரசங்கங்கள் மூலம் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், அவரது 9 பொது மற்றும் தனியார் வங்கிக் கணக்குகளை சோதனையிட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இந்த அனுமதியை வழங்கியுள்ளதுடன், அதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில் 100 கோடி ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த வங்கிக் கணக்குகள் ஊடாக 12 பில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மூன்று அரச வங்கிகள், ஐந்து உள்ளூர் தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கியொன்றின் கிளையின் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர் ஜெபக் கூட்டங்களை நடத்தும் மத்திய நிலையங்களின் கணக்குகள், அரச மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள அவரது மனைவியின் கணக்குகள் ஆகியவற்றை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.