
அகதிகள் படகு மூழ்கியது 78 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு..!
கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கிரீஸ் கடலோர காவல்படை அதிகாரிகள், "கிரீஸ் கடற்கரையில் இருந்து 47 நாட்டிகல் மைல் தொலைவில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் படகில் வந்தவர்களில் குறைந்தபட்சம் 78 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான படகிலிருந்து 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிழைத்தவர்களில், 4 பேர் தாழ்வெப்பநிலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடல் சீற்றம் காரணமாக மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடலில் மூழ்கியவர்கள் குறித்த சரியான தகவல் இன்னும் உறுதியாகவில்லை.
இந்தப் படகு லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி வந்துள்ளது. இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படகு, லிபியாவின் டோப்ருக் பகுதியில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தப் படகில், எத்தனை பேர் பயணித்தனர் என்பது குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மீட்புப் பணியில் கடலோர காவல் படையைச் சேர்ந்த 6 கப்பல்களும், ஒரு கடற்படை கப்பலும் ஈடுபட்டுள்ளன. இந்தப் படகில் எகிப்து, சிரியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்துள்ளனர்" என தெரிவித்தனர்