கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல்: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல்: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில் சமீபத்தில் கருப்பர் கூட்டம் சேனலை நிர்வகித்து வந்த செந்தில் வாசன் என்பவரும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக நீதிமன்ற காவலில் அடைக்கபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். நேற்று நள்ளிரவில் தி நகர், கண்ணம்மாபேட்டை அருகே அமைந்துள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்குச் சென்ற மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அங்கு சோதனையிட்டு ஒருசில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும், அதன்பின்னர் கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கருப்பர் கூட்டம் அலுவலகத்தை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்ட உரிமையாளரிடமும் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது