பாகிஸ்தானில் 100 ஆண்டு பழமையான கோவிலில் இந்துக்கள் தரிசனம்
இந்தியாவில் இருந்து 200 பேர், துபாயில் இருந்து 15 பேர் மற்றும், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இருந்தும் வந்த பக்தர்கள் மஹாராஜா பரம்ஹன்ஸ் ஜி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மஹாராஜா பரம்ஹன்ஸ் ஜியின் சமாதி மற்றும் கோயில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தின் டேரி கிராமத்தில் அமைந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கலவரத்தில் நூறாண்டு பழமைமிக்க இந்த கோயில் சேதமடைந்தது. இதற்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, அந்த மாகாண அரசு சுமார் 3.3 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், நூறாண்டு பழமைமிக்க மஹாராஜா பரம்ஹன்ஸ் ஜியின் கோயில் நேற்று திறக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு வந்த இந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தானில் உள்ள ஹிந்து கவுன்சில் செய்து வந்தது.
இந்தியாவில் இருந்து வந்த யாத்திரிகர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்துள்ளது, பிராந்தியத்தில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கு ஒரு நேர்மறையான செய்தி என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.