தியத்தலாவையில் இரு இராணுவ வீரர்களுக்கு கொரோனா!

தியத்தலாவையில் இரு இராணுவ வீரர்களுக்கு கொரோனா!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தியத்தலாவைக்கு வந்திருந்த இராணுவத்தினர் இருவர், தமக்கான உடைகளை தியத்தலாவை தையல் நிலையமொன்றில் கடந்த 11 ஆம் திகதி தைத்துச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, தியத்தலாவை தையல் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் ஏழு பேரையும் இன்று பிற்பகல் பதுளை அரசாங்க வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இப் பரிசோதனை நிறைவுற்றதும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துவதற்கு அல்லது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்புவது குறித்தும் தீர்மானிக்கப்படுமென பதுளை அரசாங்க வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இராணுவ இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அம் மூவருடன் தொடர்புடைய 116 பேர் பதுளை பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மூவரும் பசறை, பதுளை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இராணுவ வீரகள் விடுமுறை பெற்று தமது வீடுகளுக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.