யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியில் உள்ள சகல பாலங்களும், மதகுகளும் புனரமைக்கப்படும்!

யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியில் உள்ள சகல பாலங்களும், மதகுகளும் புனரமைக்கப்படும்!

யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளின்போது வீதியிலுள்ள மிக பழுதடைந்த பாலங்கள், மதகுகள் புனரமைக்கப்படாமை தொடர்பாக மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அனைத்து பாலங்களும், மதகுகளும் புனரமைப்பு செய்யப்படும்.

மேற்கண்டவாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர் வி.சுதாகர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா அபாயம் காரணமாக பிரதேச செயலகத்தின் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடு இடம்பெற்றதால் வீதியை அகலிப்பதற்கான மக்களின் சம்மதக் கடிதங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் டிசம்பர் மாதம் மழை ஏற்படுவதற்கான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இயன்றவரை விரைவாக வீதியை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. குறித்த வீதிப் புனரமைப்பின்போது மதகுகள் புனரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஊடகங்களில் வெளியானதை அறிந்தேன்.

ஆகவே குறித்த வீதியில் உள்ள அனைத்து மதகுகளும், பாலங்களும் காப் வீதிக்கு சேதமின்றி புனரமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.