ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் ஆரம்பம்

ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரைச் சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், அந்த நாட்டு நேரப்படி நேற்று (30) பிற்பகல் 12.30 அளவில் கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார்.

காலநிலை மாற்றங்களும், அதற்கு முகங்கொடுத்துச் செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், குறித்த மாநாடு இன்று (31) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினங்கள் உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.