கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு - மண்ணில் புதைந்த 22 பேரை தேடும் பணி தீவிரம்

கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு - மண்ணில் புதைந்த 22 பேரை தேடும் பணி தீவிரம்

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக நடந்தாலும் இன்னும் 22 பேரை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

காட்டாற்றில் கரைபுரண்டு வரும் வெள்ளத்தையும், வீடுகள் மழை நீரில் மூழ்கி கிடப்பதையும் படத்தில் காணலாம்

திருவனந்தபுரம்:

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கேரளாவில் நேற்று பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவு படுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது. இதில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்துச் சென்று அவர்களை மீட்டனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக நடந்தாலும் இன்னும் 22 பேரை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழைக்கு கோட்டயம் மற்றும் இடுக்கியில் 2 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்தனர். இது போல தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றுப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார், அடித்துச் செல்லப்பட்டது.

கோட்டயம், காஞ்சிரபள்ளியில் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் கார்கள்.

இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இதில் பெண்ணின் உடல் காணியாந்தோடு பகுதியில் மீட்கப்பட்டது. அவருடன் இருந்தவரின் உடலை தேடும் பணி நடக்கிறது. பத்தனம்திட்டா பகுதியிலும் மழைக்கு 2 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கேரளாவில் பெருமழை பெய்யத் தொடங்கியதும் மேஜர் அபின் கே பால் தலைமையில் 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் இறங்கினர். மழை நீடித்ததால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இவர்களால் உடனடியாக செல்ல முடியவில்லை.

மேலும் ராணுவ ஹெலி காப்டர்களும் மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் அங்குச் சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.

இடுக்கி கோட்டக்கல்லில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிந்து விழுந்த வீடுகள்

மழையால் வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபோல வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் வசித்தவர்களும் கடற்படை மற்றும் நீச்சல் வீரர்களால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இது போல இடுக்கி, மலம் புழா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கேரளாவில் மேற்கொண்டுள்ள மழை நிவாரண பணிகள் குறித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியதாவது:-

கேரளாவில் தற்போது வரை மழை குறையவில்லை. இதனால் சூழ்நிலை மோசமாகவே உள்ளது. மழை நீடிப்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆறுகள், குளங்கள், நீர் நிலைகள் அனைத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அணைகளில் உபரி நீர் திறக் கப்பட இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.