அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்பு - விகாரமாதேவி பூங்காவில் செலுத்தப்படவுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாளைய தினம் பத்தரமுல்லை - தியத்த உயன மற்றும் கொழும்பு விகாரமாதேவி பூங்கா ஆகிய இடங்களில் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசரப்பட வேண்டாம் என்றும், இது வழங்கப்பட வேண்டிய அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் 18 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும், 8 வைத்தியசாலைகளிலும், 13 தெரிவு செய்யப்பட்ட இடங்களிலும் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, களுத்துறையில் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும், கம்பஹாவில் 15 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலலும் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் தடுப்பூசி அட்டையையும் உடன்கொண்டு வருமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


