ஹிஷாலினியின் சரீரம் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது

ஹிஷாலினியின் சரீரம் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் சரீரம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

குறித்த சரீரத்தை தனிமைப்படுத்தல் நெறிமுறைகளுக்கு அமைவாக தோண்டி எடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், நேற்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற விடயத்தை காவல்துறையினர் நேற்று நுவரெலியா நீதவானுக்குத் தெரியப்படுத்தினர்.

அத்துடன் நுவரெலியா நீதவானின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரியப்படுத்தப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் லக்சிகா குமாரி ஜயரத்ன, விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் இன்று காலை 8.30 அளவில் ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் காவல்துறைப் பாதுகாப்புடன் சரீரத்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அவர் கட்டளை பிறப்பித்தார்.

ஹிஷாலினியின் சரீரத்தை மீளத் தோண்டி, இரண்டாம் பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக விசேட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய விஞ்ஞானப்பிரிவின் பேராசிரியர் ஜீன் பெரேரா தலைமையில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இன்றையதினம் தினம் டயகம பகுதிக்கு சென்று, அங்கு புதைக்கப்பட்டுள்ள ஹிஷாலினியின் சரீரத்தை மீளத் தோண்டி எடுக்கவுள்ளது.

இதன்போது துறைசார்ந்த நிபுணர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

ஹிஷாலினியின் சரீரம் மீளத்தோண்டப்பட்டு அவர் மரணித்த விதம், துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை, அசம்பாவிதம் இடம்பெற்ற காலகட்டம், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா? போன்ற பல விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பயணியாற்றிய நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிஷாலினி என்ற 16 வயதான சிறுமி தொடர்பில் நியமிக்கப்பட்ட இரண்டு காவல்துறை குழுக்கள் நேற்றைய தினமும் ஹட்டன் - டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்தன.

2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பெண்களில் ஐந்து பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இன்னும், ஐந்து பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.