இலங்கை கால்பந்து சம்மேளனம் கோபா குழு முன்னிலையில் அழைப்பு

இலங்கை கால்பந்து சம்மேளனம் கோபா குழு முன்னிலையில் அழைப்பு

ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கூடும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை கால்பந்து சம்மேளனத்தை பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதோடு. ஆகஸ்ட் 04 ஆம் திகதி கூடும் அரசாங்கக் கணக்குக் குழுவிற்கு (கோபா) நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆகியன அழைக்கப்பட்டுள்ளன.

இலங்கைப் பாராளுமன்ற பணிப்பாளரினால் (தகவல் தொடர்பு ) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குக் குழு மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழு உள்ளிட்ட 13 குழுக்கள் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் கூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பேராசிரியர் சரித ஹெரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளதோடு, அரசாங்கக் கணக்குக் குழு பேராசிரியர் திஸ்ஸ விதானவின் தலைமையில் நடைபெறும். சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் மருத்துவ வழங்கல் செயன்முறை குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் சிறப்பு அறிக்கை தொடர்பில் கோபா குழு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதியன்று மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.

மேலும், நீதி அமைச்சின் ஆலோசனைக் குழு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் கூடவுள்ளதோடு, சுகாதார அமைச்சு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் தலைமையில் நடைபெறும்.

இலங்கை தர நிர்ணய நிறுவனம் ஆகஸ்ட் 04 ஆம் திகதியன்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதோடு, அன்றைய தினமே வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூட்டப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் ஆகஸ்ட் 05 ஆம் திகதியன்று கூடவுள்ளது. நீதி அமைச்சு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவும் அன்றைய தினமே கூடும். மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மீன்வளத்துறை அமைச்சு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு அதே நாளில் பாராளுமன்றத்தில் கூட்டப்படும். அதேநாளில், கைத்தொழில் அபிவிருத்திச் சபை கோப் குழுவின் முன் வரவழைக்கப்படவுள்ளதோடு கூட்டுறவு மேம்பாட்டுத் துறை கோபா குழுவுக்கு வரவழைக்கப்படவுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கி ஆகஸ்ட் 06 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னர் வரவழைக்கப்படவுள்ளது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.