இளைஞனுக்கு எமனான எருமை மாடு!

இளைஞனுக்கு எமனான எருமை மாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீதியின் புளியங்குளம் பகுதியில் நேற்று (15) அதிகாலை வேளை மாட்டுடன் மோதுண்டு வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துஐயன் கட்டுப்பகுதியில் இருந்து கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் யுவதியினை கொக்குத்தொடுவாய் பகுதிக்கு உந்துருளியில் ஏற்றி சென்ற வேளை புளியங்குளம் பகுதியில் எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்

இந்த விபத்தின் போது வவுனியா ஓமந்தையினை சேர்ந்த 24 அகவையுடைய கதிர்காமநாதன் நிலோஜன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் உந்துருளியில் பயணித்த யுவதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.உயிரிழந்த இளைஞனின் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீதியில் புளியங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் எருமை மாடுகள் நிற்பதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.