சுலேமானீ மீதான ஆளில்லா விமானத் தாக்குதலானது தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை: ஐ.நா.

சுலேமானீ மீதான ஆளில்லா விமானத் தாக்குதலானது தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை: ஐ.நா.

ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரான காசெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமானத் தாக்குதலானது தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரான ஏக்னஸ் கேலமார்ட் தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான ஏக்னஸ் கேலமார்ட் தனது அறிக்கையை நேற்று (வியாழக்கிழமை) ஐ.நா. மனித உரிமை சபையிடம் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘ஈரான் ராணுவத்தின் ராஜதந்திரங்களுக்கு தலைமை தாங்கியவரான சுலேமானீ, சிரியா மற்றும் ஈராக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்தார். அவரால் மற்றவர்கள் உயிர்களுக்கு ஆபத்து என்ற நிலை இல்லாத நிலையில், இதுபோன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது சட்டத்துக்குப் புறம்பானது.

எனவே இந்த ஆளில்லா விமானத் தாக்குதலானது தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை என்பதால், சர்வதேச மனித உரிமை சட்டப்படி இதற்கு அமெரிக்காதான் பொறுப்பு. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களும் சட்டத்துக்கு எதிரானது’ என கூறினார்.

எனினும், இதனை ‘பயங்கராவதிகளுக்கு ஆதரவளிக்கும் பேச்சு’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காசெம் சுலேமானீ மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

இதனிடையே, சுலேமானீ கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 35 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள ஈரான், கடந்த வாரம் அவர்களுக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரான சுலேமானீ, அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற இராணுவத் தளபதியாக விளங்கியவர்.

ஈரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். 1998ஆண்டு முதல் காசெம் சுலேமானீ, ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்து வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்
ஈரானின் புரட்சிகர இராணுவப் படையானது, அந்நாட்டின் இஸ்லாமிய கட்டமைப்பை பாதுகாக்க 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது.

இந்த படை பிரிவு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கூட்டணி அரசுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழுவிற்கு இரகசியமாக பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற உதவிகளை வழங்கும். இதன் மூலம் ஈரானின் ஆதிகத்தை மத்திய கிழக்கு பகுதிகளில் விரிவுபடுத்தும் லட்சியம் முன்னெடுக்கப்பட்டது.