கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான மையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
தொற்று நோய் பரவல் / தடுப்பு, அமுல் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், பிசிஆர் பரிசோதனைகளை நடத்துதல், பயணக் கட்டுப்பாடுகளின் விளைவுகளை மதிப்பீடு செய்தல், வைரஸ் பரவலின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காணுதல், சமூகத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது கவனம் செலுத்துதல், இறப்புக்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடுதல், இடைநிலை பராமரிப்பு நிலையங்களை பராமரித்தல், தயார் நிலைமைகள் ஆகியவை தொடர்பாக நேற்று முன்தினம் (16) ராஜகிரியவிலுள்ள கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான மையத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நொப்கோ தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, ஆகியோர் தலைமையில் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றதுடன், இச்சந்திப்பில் கொவிட் தடுப்பு செயலணியின் உறுப்பினர்கள், மருத்துவ நிபுணர்கள், நிர்வாகிகள் மற்றும் பிற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அத்தோடு ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட திட்டத்துக்கு அமைவாக, புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது அது தொடர்பில் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என்பதுடன், அதேபோல் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டதெனவும், நாடு முழுவதிலும் இடம்பெற்ற மரணங்கள், மாகாண மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தகவல்களை பகிர்வதில் காணப்படும் தாமதிப்புக்களை நிவர்த்திப்பதற்கான அவசியத்தை வலியுறுத்திய தளபதி இது போன்ற பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
அதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் இறப்புகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன், தற்போது உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்று நோயின் தன்மை, இலங்கையின் புள்ளி விபரங்கள், தொற்று உறுதியாகின்றமை, இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் வசதிகள், அடக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கருத்துரைத்தார்.
மேலும், அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை ஓய்வெடுக்கச் செய்வதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.