முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து துரித கவனம்

முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து துரித கவனம்

இறக்குமதி – ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும், கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்தினால் பொருட்களை விடுவிப்பதற்கு முன்னர் அனுமதிகளை பெற வேண்டிய நிறுவனங்களின் செயல்முறையை செயற்திறன் மிக்கதாக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (17) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

சுங்கத்தினால் பொருட்களை விடுவிக்கும் போது ஏற்படும் தாமதங்கள் மற்றும் மாதிரி பரிசோதனை மேற்கொள்வதற்கான காலம் நீடித்தல், தர சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காரணத்தினால் அதிக தாமத கட்டணங்களை செலுத்த வேண்டியிருப்பது குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைக்கு பங்களிக்கும் அரசு நிறுவனங்களுக்கிடையில் சரியான உறவு இல்லாதது பொருட்களின் விடுவிப்பையும் தாமதப்படுத்துகிறது என்பது இதன்போது தெரியவந்தது. மாதிரி சோதனை மற்றும் தர உத்தரவாதம் இல்லாமல் பொருட்களை விடுவிக்க முடியாது என்று சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பொருட்கள் விடுவிப்பின் போது சான்றிதழ் பெற வேண்டிய பொருட்கள் மற்றும் அவ்வாறான செயல்முறை அற்ற பொருட்களும் உள்ளன. இதன் விளைவாக குறைந்த தரம் வாய்ந்த வெளிநாட்டு பொருட்கள் சந்தைக்கு வெளியிடப்படும் அபாயம் உள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மீள்ஏற்றுமதி செயல்பாட்டின் போது உள்ளூர் சந்தைக்கு பொருட்கள் வெளியிடப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நிலவும் கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறையை விரைவுபடுத்த குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறினார்.

பசில் ராஜபக்ஷவின் தலைமையில் செயற்படும் ஜனாதிபதி செயலணி ஊடாக இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான துணை குழுக்களை நியமித்து, தொடர்புடைய வரி அமைச்சகங்களுடன் இணைந்து சிக்கல்களை தீர்ப்பது குறித்து கலந்துரையாடுவதாகவும், பின்னர், கொள்கை முடிவுகளை விரைவாக எடுக்க அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சுகாதார அமைச்சு, தரநிலை நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தர சான்றிதழ்களுக்கு ஒப்பான உள்ளூர் தர சான்றிதழ்களில் காணப்படும் முரண்பாடுகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கொள்கலன்களை விடுவிப்பதை விரைவுபடுத்துவதற்காக துறைமுகத்தில் தரநிலை நிறுவனத்தின் ஒரு கிளையைத் திறக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். துறைமுகத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையில் அடுத்த வாரம் சிறப்பு கலந்துரையாடல் நடைபெறும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன, ரமேஷ் பதிரன, கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, அஜித் நிவாட் கப்ரால், அருந்திக பெர்னாண்டோ, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.