திருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்

திருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் பற்றிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து மக்களின் வரலாற்றுத் தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என தேரர் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த பெருமான் தேவாரப் பதிகம் பாடிய திருத்தலமாக திருக்கோணேஸ்ரம் விளங்குகிறது.

மேலும், இலங்கையை ஆண்ட தமிழ் மன்னான இராவணன் சிவபூஜை செய்த திருத்தலமாகவும் குறித்த ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

சுமார் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் புகலிடமாக விளங்குகின்ற வெடுக்குநாறி, செம்மலை நீராவியடி, அரிசி மலை, திரியாய் கண்ணியா, மத்தலவள முதலான 15 பிரதேசங்களை உள்ளடக்கி கதிர்காமம் வரை தமிழர்களின் புராதான அகழ்வாராய்சி பகுதிகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

இந்நிலையில் தமிழர்களின் புராதன பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதாகக் கூறி பௌத்த வரலாற்று சிதைவுகளை உட்சேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை வருத்தம் அளிக்ககூடியதாக உள்ளது.

ஆகவே, மனிதனின் செம்மையான வாழ்க்கை தத்துவங்களையும் வழிபாட்டு முறைகளையும் கற்றுக்கொடுக்கும் மதங்களின் பெயரால் இன்னோர் மதத்தவர் வருத்தும் வகையில் குறித்த தேரர் நடந்துகொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.