இலங்கையின் நல்லிணக்கத்துக்காக இந்தியா நிலையான ஆதரவு வழங்கும் - இந்திய உயர்ஸ்தானிகர்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இன்றையதினம் இந்திய இல்லத்தில் சந்தித்தனர்.
வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.