மனித உரிமைகள் அமர்வில் சீனா ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க முடியாது - பிரதமர் மஹிந்த

மனித உரிமைகள் அமர்வில் சீனா ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க முடியாது - பிரதமர் மஹிந்த

சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோதும், சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே, இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், இணையவழி காணொளி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக, ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் சீனா முன்னேற முடிந்தது.

சீனாவிற்கும் இலங்கைக்கும், இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன.

இதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா ஆற்றிய சேவையை தாம் ஒருபோதும் மறக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீன அரசாங்கம் செய்த தியாகங்களை தாங்கள் எப்போதும் பாராட்டுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.