
அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகிறது! எனினும்..
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழையை தொடர்ந்து அதிகரித்த ஆறுகளில் நீர்மட்டம் தற்போது குறைந்து வருகிறது.
எனினும் களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும் ஆறுகளில் மேற்பகுதி நீரேந்து பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கும் படி நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜி.வி. சுகிஸ்வர பொதுமக்களை கேட்டுள்ளார்.
குறிப்பாக களுகங்கை, களனி கங்கை, அத்தனகல்ல ஓயா ஆகிய ஆறுகளின் மேற் பிரதேசங்களில் நேற்று குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. அதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்து தற்போது நீங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சீற்றகால நிலையினால் இதுவரை 17 பேர் உயிரிழ்ந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (07) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 935 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)