நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500ஐக் கடந்தது!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,527ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதி செய்யப்பட்டு வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இன்றையதினம் நாட்டில் ஒரு கொவிட் மரணம் சம்பவித்துள்ளது.
அத்துடன் மே மாதம் 20 ஆம் திகதி முதல், 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 42 மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்று (01) பதிவான மரணங்களில் 12 பெண்களதும் 31 ஆண்களதும் மரணங்கள் உள்ளடங்குகின்றன.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, கொழும்பு - 15, இறக்காமம், காலி , கொச்சிக்கடை , கொழும்பு 05, மாத்தளை, ஹொரனை, வத்தளை, யட்டியன்தோட்டை, கொழும்பு - 07 உள்ளிட்ட பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த அறிக்கையின் பிரகாரம். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட 02 பேரும், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 02 பேரும் 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 06 பேரும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்ட 16 பேரும், 70 - 79 வயதுக்கு உட்பட்ட 10 பேரும், 80 முதல் 89 வயதுக்கு உட்பட்ட 06 பேரும், 90 முதல் 99 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் உயிரிழந்தனர்.
மேலும் அவர்களில் 07 பேர் வீட்டில் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் 36 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மரணங்கள் அனைத்தும் நாட்பட்ட ஈரல் நோய் , கொவிட் 19 நுரையீரல் தொற்று , இதயநோய் நிலைமை , குருதிப்புரை நோய் , நியூமோனியா நீரிழிவு , தீவிர நுரையீரல் அழற்சி , பல தொகுதி நோய் , தீவிர கொவிட் நியூமோனியா , மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை , பல உறுப்புக்கள் செயலிழந்தமை , தீவிர நியூமோனியா , மோசமாக குருதி நஞ்சானமை , பக்கவாதம் , சிறுநீரக நோய் , உயர் குருதியழுத்தம் நாட்பட்ட சிறுநீரக நோய் , புற்றுநோய் மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமைகள் ஆகியவற்றால் இடம்பெற்றுள்ளன.