தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த 14 மாத காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையானவர்கள் கைதான சந்தர்ப்பம் இதுவாகும்.

மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் 171 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பான சுற்றிவளைப்புகளின் அடிப்படையில், இதுவரையில் 17 ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் நேற்றையதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, வீதிகளில் பயணித்த 20 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயணித்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறக்கூடிய 14 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது 151 வாகனங்களில் பயணித்த 218 பேர் அநாவசியமாக மாகாண எல்லைகளை கடக்க முயற்சித்த வேளை அவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.