நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது - மக்கள் செயற்பட வேண்டிய விதம்

நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது - மக்கள் செயற்பட வேண்டிய விதம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்ப்படுத்தப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்கொள்வனவுக்காக நடமாட்டக் கட்டுப்பாடு இன்றிரவு 11 மணி வரையில் தளர்த்தப்பட்டிருக்கும்.

இன்றிரவு 11மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்ட கட்டுப்பாடானது எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.

எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அதன்பின்னர் 31 ஆம் திகதி இரவு 11மணி முதல் அடுத்த மாதம் 4 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இதனையடுத்து அன்றைய தினம் இரவு 11மணி முதல் அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4மணி வரை நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடமாட்ட கட்டுப்பாடு தளர்த்தப்படும் இன்றைய தினமும், எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜூன் மாதம் 4ஆம் திகதிகளில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியும்.

இதற்காக, இந்த மூன்று தினங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் உள்ள சகல வெதுப்பகங்கள், சில்லறை விற்பனையகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்படும்.

நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, உணவு, மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பிரதேச மட்டத்தில் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையில் சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும், எதிர்வரும் 31ஆம் மற்றும் ஜூன் மாதம் 4ஆம் திகதிகளில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளிசயில்செல்ல முடியும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வாறு வெளிச்செல்பவர்கள் நடைதூரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரமே செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்கொள்வனவுக்காக வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை.

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, தேசிய அடையாள அட்டைக்கு அமைய வெளிச்செல்லும் முறை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு தொடர் மாடிக்குடியிருப்புகள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்வதற்காக ஆளிலில்லா விமானத்தின் ஊடாக கண்காணிக்கப்படவுள்ளது.

இதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.