அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்:

அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்:

மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இந்த மாதம் தனது ஓவியங்களை விற்று மின் கட்டணத்தை கட்டியதாகவும் அடுத்த மாத மின்கட்டணத்திற்கு தனது சிறுநீரகங்களை தான் விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பிரபல நடிகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் மின் கட்டணம் மிக அதிகமாக வருவதாக ஏற்கனவே பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் புகார் கூறியுள்ளது குறித்து பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் பாடகர் ஓவியர் என பன்திறமை கொண்ட ஹர்சன் வர்சி என்பவரின் வீட்டிற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி அவருக்கு வந்த மின் கட்டணத்திற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து அவரை கேட்காமலேயே மின் துறையினர் பணத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹர்சன் வர்சி மின் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடந்து வருவதை தடுக்க யாருமே இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் நான் வரைந்த ஓவியங்களை தற்போது விற்றுத்தான் வீட்டு செலவை கவனித்து வருவதாகவும் இந்த மின் கட்டணம் அடுத்த மாதமும் தொடர்ந்தால் அடுத்த மாதம் மின் கட்டணம் கட்ட என்னுடைய சிறுநீரகங்களை தான் விற்க வேண்டிய நிலைமை வரும் என்றும் அவர் கூறி உள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி ஓவியம் வரைந்து கொண்டிருப்பதாகவும், இந்த ஓவியத்தை தயவு செய்து அனைவரும் வாங்கி தனக்கு உதவி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபல நடிகரின் இந்த பேட்டி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.