துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை இடம்பெறவுள்ளது.
இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தின் பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்களை நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் சில சரத்துக்களை நிறைவேற்ற சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும் உயர்நீதிமன்ற தீர்பை ஏற்றுக்கொண்டு திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த சட்டமூலம் நாட்டின் இறைமையை மீறும் வகையில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நாட்டிலுள்ள சிறுபான்மை வர்த்தகர்களுக்கு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.