நாளை முதல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் உணவு விநியோகத்தை முன்னெடுக்கலாம்!

நாளை முதல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் உணவு விநியோகத்தை முன்னெடுக்கலாம்!

நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய விற்பனை நிலையங்கள் ஊடாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தொிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், உணவகங்களில் இருந்து (தொலைபேசி வாயிலாக கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப) வீடுகளுக்கு உணவு விநியோகிக்க முடியும். எனினும், உணவகங்களில் விற்பனை செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியில்லை.

இதனை தமது ஊழியர்களை மாத்திரம் கொண்டு மேற்கொள்ளமுடியும். எனினும், அப்பகுதியிலுள்ள காவல்நிலையத்துக்கு முன்னறிவித்தல் மேற்கொண்டு, தாம் உணவு விநியோகிக்கும் வாகனம் தொடர்பிலும் அறிவிக்க வேண்டும்.

இதேவேளை, மெனிங் சந்தை, பேலியகொடை மீன் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் எனினும், இந்த கட்டுப்பாட்டு காலப்பகுதியில் மொத்த விற்பனைகளை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்றும் சில்லறை வணிகத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.