சகல வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராயும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் திலும் அமுனுகம
14 பேர் உயிரிழப்பதற்கு காரணமான பசறையில் பேருந்து விபத்து இடம்பெற்றதன் பின்னர் சகல வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராயும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீதியின் தரம் தொடர்பில் இந்த குழு ஆராய்ந்து அதில் குறைப்பாடுகள் இருக்குமானால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும்.
அதன் பின்னரும் அது சீரமைக்கப்படாமல், அதனால் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு அந்த நிறுவனங்களே பொறுப்புகூற வேண்டும்.
இதேவேளை, தனியார் பேருந்து சாரதிகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான விசேட அனுமதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சாரதி அனுமதி பத்திரத்திற்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அவர்கள் சித்தியடைந்திருக்க வேண்டும்.
அதில் சித்தியடைவோருக்கு மாத்திரமே 2 வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பயற்சிகள் வழங்கப்படும்.
அவர்களது மனநிலை மற்றும் செயற்திறன் குறித்தும் கண்காணிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்