பாடசாலை விடுமுறை - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள அதிரடி மாற்றம்

பாடசாலை விடுமுறை - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள அதிரடி மாற்றம்

இவ்வருடம் உயர்தர பரீட்சை, சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பன நடத்தும் திகதியில் மாற்றம் உள்ளதால் பாடசாலை விடுமுறை தினங்களிலும் மாற்றம் வரவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஏப்ரல் 19 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இரண்டாம் தவணைககாக மீள ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஓகஸ்ட் மாத பாடசாலை விடுமுறையை ஒக்டோபர் மாதத்தில் வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.

மேலும், க.பொ.த. சாதாரண தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ளதால், டிசம்பர் மாதத்துக்கான விடுமுறையை ஜனவரி மாதம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

ஆகவே, ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு க.பொ.த. உயர் தரம், 5 ஆம் தர புலமை பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நடத்தப்படும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சசின் உயர்மட்ட குழு கலந்தாலோசித்து வருகிறது.

5 ஆம் தர புலமைப் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியன்றும், க.பொ.த உயர் தரப்பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும், க.பொ.த. சாதாரண தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாத கடைசி வாரத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.