கோட்டாபய விதித்த உடனடி தடை - கோடிக்கணக்கில் இலாபத்தை சம்பாதிக்கும் நிறுவனம்

கோட்டாபய விதித்த உடனடி தடை - கோடிக்கணக்கில் இலாபத்தை சம்பாதிக்கும் நிறுவனம்

பாம் ஒயில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சீனி வரி மோசடியுடன் தொடர்புடைய பிரமிட் வில்மார் நிறுவனம் 8000 இலட்சம் மேலதிக இலாபம் பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

"2020இல் தேங்காய் எண்ணெய் இறக்குமதி குறித்து வர்த்தமானி அறிவித்தல் விடுத்தனர். விலை குறைப்பர் விலை அதிகரிப்பர். வியாபாரிகளுக்கு இலாபம் பெற்றுக் கொடுக்கவே இத்திட்டம்.

வில்மார் நிறுவனத்தின் களஞ்சியத்தில் தற்போது 8000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இருப்பில் உள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாம் ஒயில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டதால் என்ன நடந்துள்ளது? 485 ரூபாவிற்கு இருந்த தேங்காய் எண்ணெய் 580, 600 ரூபாவிற்கு அதிகரித்துள்ளது. எனவே ஒரு தொன் தேங்காய் எண்ணெய்க்கு 50,000 தொடக்கம் ஒரு இலட்சம் வரை இலாபம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிலையான கொள்கை இல்லாத காரணத்தால் வியாபாரிகள் கொடிகட்டிப் பறக்கின்றனர். சந்தைகள் இன்று வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாம் ஓயிலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்தினம் இறக்குமதிக்கான தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.