தரமற்ற தேங்காய் எண்ணெய்யின் இரண்டாம் மாதிரியை சுகாதார அமைச்சு இதுவரையில் வழங்கவில்லை - இலங்கை தரநிர்ணய நிறுவகம்
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளமை தொடர்பான பரிசோதனைகளில், சுகாதார அமைச்சின் தலையீடு தொடர்பில், இலங்கை தரநிர்ணய நிறுவகம் கருத்து தெரிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் இரசாயனம் உள்ளதை தாங்களே முதலில் கண்டறிந்ததாக, அதன் பணிப்பாளரான, பேராசிரியர் சித்திக்கா சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இரண்டாம் மாதிரியை சுகாதார அமைச்சு இதுவரையில் தங்களுக்கு வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக மூன்று தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நபர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய உச்சபட்ச சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தரநிர்ணய நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன வழங்கும் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த தேங்காய் எண்ணெய்யை கட்டாயம் மீள் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்