
மனைவி 5 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக கணவன் முறைப்பாடு!
தனது மனைவி 5 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக தமிழ்நாட்டின் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
பேஸ்புக்கில் அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மேற்படி பெண்ணுடன் காதல் கொண்டு, 2018 ஆம் ஆண்டு அவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கையில், எனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது கைப்பேசியை சோதனை செய்து பார்த்தேன். அப்போது அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்த நான் அவரை கண்டித்ததால் அவர், தனது தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றார்.
எனினும், மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அவர் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. எனது வீட்டை விட்டுச் செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுண் சங்கிலி மற்றும்.70 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை எடுத்துச் சென்று விட்டார்.
பேஸ்புக் மற்றும் டிக்டொக்கில் தனது பதிவுகளை பதிவிட்டு அதற்கு பதில் பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து அந்த பெண் ஏமாற்றி உள்ளார். தற்போது வரையில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
எனவே என்னை ஏமாற்றிச் சென்ற அந்த பெண்ணைக் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மயிலாடுதுறை காவல்துறையினர் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்