பொதுத் தேர்தல் – 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் கடமையில்

பொதுத் தேர்தல் – 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் கடமையில்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

தேர்தல் காலத்தில் இலங்கை சிவில் பாதுகாப்பு படையிலிருந்து சுமார் 10,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வரவிருக்கும் தேர்தல் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க நடத்தப்படும் என்பதால், பொலிஸார், தேசிய தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார்.

மேலும் 2020 பொதுத் தேர்தல் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க நடைபெறுவதை உறுதி செய்வது பொலிஸாரின் பொறுப்பாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை சோஷலிச குடியரசின் 09 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.