
கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த காத்தான்குடி நகரின் 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் வர்த்தக நிலையங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டிருந்தன.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
தொடரான அன்டிஜன் பரிசோதனைகளை அடுத்து குறித்த பிரதேசத்தின் 8 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.
தொடர்ந்தும் கடந்த 40 நாட்களாக 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் 4 வீதிகளைத்தவிர 10 கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அறிவித்ததையடுத்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தததுடன் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் என்பனவும் திறக்கப்பட்டன. அத்துடன் வழமையான அலுவல்களும் இடம்பெற்று வருகின்றன.