பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள அறிவுறுத்தல்!
பால் விவசாயிகளுக்காக 2021 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 5 இலட்சம் ரூபா கடன் தொகையை ஒரு மில்லியனாக (10 இலட்சம்) உயர்த்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
நிதி அமைச்சகத்தில் பிற பொது சலுகைகள் உட்பட பட்ஜெட்டில் முன்மொழிவுகளை அமுல்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக் கூட்டத்தின்போதே பிரதமர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி அடுத்த வாரம் முதல், பால் விவசாயிகள் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 4 சதவீத வட்டிக்கு ஒரு மில்லியன் ரூபா வரை கடன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது, பேசிய நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல்லே, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றும் தற்போது பெறப்பட்ட வீட்டுக் கடன்கள் 7 சதவீத வட்டி விகிதத்தில் இயக்கப்படுவதாக கூறினார்.
அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களின் கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு தற்போது 4 சதவீத வட்டி விகிதத்தில் 800,000 ரூபா வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பருவத்தில் நெல் வாங்க சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் செமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
நெல் வாங்குவதற்காக கடன்களை விரைவாக வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தியதுடன், இது பீர் உற்பத்தி போன்ற துணை தயாரிப்புகளுக்கு பெரிய அளவில் நெல் வாங்குவதை மட்டுப்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், மத்திய மாகாண வீட்டுவசதி திட்டங்களுக்கு 6.25 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கத் தொடங்கியுள்ளது.
சமுர்தி உறுப்பினர்களுக்கு மின்சாரம் கிடைப்பது உள்ளிட்ட சலுகைக் கடன்களை விரைவாக வழங்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் இப்போது அந்நிய முதலீட்டில் அதிக கவனம் செலுத்துகிறது என்று நிதி அமைச்சக செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்நாட்டு வருவாய் துறைக்கு ஒன்லைனில் வரி செலுத்துவது இன்று (நேற்று) முதல் செயலில் இருக்கும் என்றும், ஐந்து வங்கிகள் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தனக்குத் தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.
கடன்கள் மற்றும் குத்தகைகளை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கு வங்கிகள் 3 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இரஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டியதோடு, கொடுப்பனவை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.