
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு துரித நடவடிக்கை!
நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை செயற்படுத்தப்படுகின்றது.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 26 ஆம் திகதி ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய ஒரு வார காலத்திற்குள் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் கலந்துரையாடி வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்ததாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாட்டில் பணிபுரியும் 32 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22,483 பேர் நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது